நன்னீர்
என்னுருவம் தீட்டி வைத்த
உன் தூரிகையின் கை வண்ணமும்
உன்னுயரம் கொண்டு
நான் எழுதிய கவிதையும்
பரிமாறப்பட்டது ஒரு தேநீர் சந்திப்பில் தான்!
தீர்க்கதரிசனத்துக்குரியவை
அந்த தேநீர் கடை நிமிடங்கள்
நம் நட்பின் ஆழம் அதிகரித்தது
தேநீர் விடுதிகளில் தான்!
சிலசமயம் அடுமனைகளில்
சிலசமயம் சாலையோரக் கடைகளில்!
பாலினப் பேதமற்றுப் பருகியிருக்கிறோம்
நட்பின் ஒவ்வொரு சொட்டு இரசத்தையும்
தேநீரோடு!
செல்வச் செழிப்பைச் சொல்லிடும்
தேநீருடனான நொறுக்குகள்
அவற்றோடு பேசி இருக்கிறோம்
பெருவிருப்பான அரசியலை
பெரும்சோகம் கவிழும் இன அழித்தொழிப்பை
அன்பிசைக்கும் நேசத்தை
கழுத்தறு பட்ட துரோகத்தை
யாருக்கும் சொல்லிடா இறந்த காலத்தை
திட்டமிடும் எதிர்காலத்தை என எல்லாம்!
புரிதலுக்கும் பகிர்தலுக்குமான உன்னதம்
நிரம்பி வழிந்து இருக்கிறது
அந்த ஒரு கோப்பை தேநீரில்!!!